Monday, December 22, 2008

உங்களுக்கு காதல் பிடிக்குமா? அப்போ இங்கே வாங்க....!

வலையுலகிற்கு வந்த புதிதில் நான் எழுதிய இந்த காதல் கவிதைகளை யாருமே கண்டுகொள்ளவில்லை என்பது அதற்கு வந்த எண்ணற்ற(பூஜ்ஜியம் எண் அற்றதுதானே) பின்னூட்டங்கள் மூலம் தெரிந்துகொண்டேன்,ஆனாலும் அதன் பிறகு நான் எழுதிய சுமாரான கவிதைகளுக்கெல்லாம் நிறைய பின்னூட்டங்கள் வந்ததைப் பார்த்தால்,ஒருவேளை நான் புதிய பதிவராக இருந்ததால் யாரும் வரவில்லையோ என்ற எண்ணம் வந்துச்சா அதுக்காண்டி இப்போ மறுக்கா அந்த கவிதைகளை ஞாபகப்படுத்துற மாதிரி இந்த பதிவு.

பஞ்சாயத்துத் தொலைக்காட்சியில்
நாடகம் பார்ப்பதெற்கென வருவாய்,
உண்மையைச் சொல்,
என்றைக்காவது
நாடகத்தை பார்த்திருக்கிறாயா..?!


நாம் காதலிப்பது
எல்லோருக்கும்
தெரிந்து விட்டது போலும்,
நீ என்னைக் கடந்து போகயில்
எல்லோரும்
என்னையே பார்க்கிறார்கள்..!

உன் வயதை
நான் மட்டும் தானே கேட்டேன்,
இன்று முதன் முதலாக
ஓட்டு போட வந்து
ஊருக்கேச் சொல்லி விட்டாயே..!


அன்றொருநாள்
உன் தாவணி
மிதிவண்டிச் சக்கரத்தில்
சிக்கிக் கொண்டதே
நினைவிருக்கிறதா,
அன்றுதான் என் மனது
உன் தாவணியில் சிக்கியது...!


உன் அக்காவின் திருமணத்தில்
உன் திருமணம் எப்போவென
யாரோ கேட்டதற்கு
நீ என்னைப் பார்த்தாயே
நினைவிருக்கிறதா?!



உனக்கு பிடித்த
கவிஞர் யார் என்றாய்,
உன் அப்பா என்றேன்
புரியாமல் பார்த்து
பிறகு வெட்கப்பட்டுச் சிரித்தாயே
நினைவிருக்கிறதா?!!


நேற்று ஊர் கிணற்றில்
என் அம்மாவிற்கு
நீர் இறைத்துத் தந்தாயாமே
அம்மா உன்னை
மெச்சிக் கொண்டே இருந்தாள்
தெரியாமல்தான் கேட்கிறேன்
வேறு யாரேனும் கேட்டிருந்தால்
நீர் இறைத்துத் தருவாயா..?!


உன் வீட்டில்
எறும்புத் தொல்லை
அதிகமென்று
சர்க்கரை டப்பாவைச் சுற்றி
பூச்சி மருந்தைத்
தூவி வைத்திருக்கிறாய்
எதற்கும்
நீ படுக்கும் இடத்தைச் சுற்றியும்
அப்படியே செய்துவிடு..!

ஆளே இல்லாத சாலையிலும்
அனிச்சையாய் அடிக்கிறேன்
சைக்கிள் பெல்லை
அருகே உன் வீடு...!



கோலமிட்டுச் சற்று
தள்ளி நின்று ரசிப்பாய்
நீ நிற்கும் கோலத்தை
என்னவென்று சொல்வது...!


நிறைகுடமும் கூத்தாடும்
நீ சுமந்து வருகையில்..!


உன்னை பார்த்துக்

கொண்டே வந்ததில்
எதிரே இருந்த கல்லில்
இடரி விழப் போன என்னிடம்
பார்த்து வாங்க என்கிறாய்..!

அன்றொருநாள்,
உன் உதட்டிற்குக் கீழே
எனது விரல் கொண்டு
கோடு வரைவதுபோல்
பாவனை செய்தேன்,
என்ன செய்கிறாய் என்றாய்,
கவிதைகள் படித்தால்
பிடித்த வரிகளை
அடிக்கோடிட்டு வைப்பது
என் வழக்கம் என்றேன்,
"சீ"எனச் சொல்லி
கைகளுக்குள் முகம் புதைத்தாயே,
நினைவிருக்கிறதா!


இந்த கவிதைகள் பிடித்திருந்தால் ,தொடர்ச்சிக்கு இங்கே கிளிக்கவும் காதல் கவிதைகள் வாசித்துவிட்டு உங்க கருத்தையும் மறக்காமல் சொல்லிட்டு போங்க.

No comments: