Monday, August 20, 2007

காவேரிக் கரையோரம்!!!

(2003-2004 ம் ஆண்டு தஞ்சைப் பகுதியில் நிலவிய வறட்சியால் விவசாயிகளின் துயர் கண்டு எழுதியது)
அன்று

பயிர்களின் அறுவடையால்
நிறைந்தன தாழிகள்
இன்று
உயிர்களின் அறுவடையால்
அறுந்தன தாலிகள்!!
*********************************************

அன்று
உணவிற்காகக் கொடுத்தோம்
பலருக்கு
அடைக்கலம்
இன்று
உணவிற்காகப்
பட்டக் கடனை
எப்படி
அடைக்கலாம்!!
************************************************

அன்று
வேளைக்கு உணவு
இன்று
உணவிற்கு வேலை!!
************************************************

அடுத்த வேளை கஞ்சிக்கு
அண்ணார்ந்துப் பார்த்த
குழந்தையிடம்
"மழை வேண்டி மாரியாத்தாளுக்கு விரதம்
ஒரு வேளைதான்சாப்பிடோனும்"
இல்லாமையால்
சொன்னாள் தாய்!!!
*************************************************
குறிஞ்சியும் ,முல்லையும்
பூத்துக் குலுங்கிய
இந்த மருத நிலத்தில்தான்
பட்டு நெய்தலும்
சிறப்புற்று விளங்கியது
ஆனால் இன்றோ
காவிரி கைவிரித்ததால்

ஆனது பாலை!!!!

No comments: